தாய்வழிச்சமூகமும் நாயர் சமூகமும்

2013ல் புதுயுகத்தில் பணியாற்றியபோது எழுதிய கட்டுரையை இப்போது பகிர்கிறேன்.
தாய்வழிச்சமூகமும் நாயர் சமூகமும்
-------------------------------------------------------------------
இன்று உலகில் பெரும்பான்மையான சமூகங்கள் தந்தைவழிச் சமூகங்களாக உள்ளன. தந்தைவழிச் சமூகத்தில், தந்தையை மையமாக வைத்தே குடும்பங்கள் இயங்குகின்றன. தந்தையின் வழியில் வரும் வாரிசுகளுக்கே சொத்துகளின் மீது உரிமை உண்டு.
ஆனால் இனக்குழு உருவாக்கத்தின் முதல் அமைப்பு தாயை அடிப்படையாகக் கொண்ட தாய்வழிச் சமூகமே என்பது மானுடவியல் அறிஞர்களின் கூற்று. ஆதிகாலத்தில் சமூகம் முழுக்க ஒரே குடும்பமாக, சொத்துடமை இல்லாத பொதுவுடைமை சமூகமாக இருந்தது. அந்தச் சமூகத்தில் தாய் என்பவள்தான் தலைவி. தாயின் வழிநடத்தலில் குடும்ப அங்கத்தினர் வேட்டையில் ஈடுபட்டு உணவைத் தேடி பகிர்ந்து உண்டார்கள். காடுகளில் மற்ற இனக்குழுக்களுடன் போரிட்டனர். இப்போர்கள் பெரும்பாலும் இரைக்கான போட்டிகளாக இருந்தன. பெண்கள் போரில் மாண்டதன் விளைவாக இனப்பெருக்கம் நலிந்து அவ்வகை இனக்குழுக்கள் அழிந்தன.
பிற்காலத்தில் இனக்குழுவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தபோது, உணவு பற்றாக்குறையை சமாளிக்க காட்டைவிட்டு இடம்பெயர்ந்து நதிக்கரைகளுக்கு இடம்பெயர்ந்தது மனித இனம். வேளாண்மை செய்தும், கால்நடைகளை வளர்த்தும், உணவை உற்பத்தி செய்து உண்ணும் பழக்கத்திற்கு சமூகம் மாறியது. இக்காலக்கட்டத்தில் உணவைப் பாதுகாக்க மட்டுமே போரிட வேண்டியிருந்ததால் ஆண்கள் மட்டுமே போரில் ஈடுபட்டனர்.
பெண்களோ வேளாண் வேலைகள், கால்நடை வளர்ப்பு, சமையல், நெசவு போன்ற பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
இவ்விதம் வீட்டின் எல்லைகளுக்குள் பெண்களின் இருப்பு சுருக்கப்பட்டபோது, பெண்ணின் குடும்பத் தலைமை மாற்றம் கண்டது; சமூகம் தந்தை வழிச் சமூகமாக, மாறியது. இதன் விளைவாக பெண்கள் தங்கள் உரிமைகளை இழக்கநேர்ந்து ஒரு பண்டமாகவே கருதப்படும் நிலையும் உருவானது. தந்தைவழிச் சமூகங்களில் ஆண்களுக்கான வாரிசைப் பெற்றுத்தருவதற்கும், ஆண்களின் குடும்பத்தேவைகளை நிறைவு செய்வதற்கும் தனிச்சொத்தைக் காப்பதற்கும் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர்.
பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களையும் தாண்டி இன்றைக்கும் சில சமூகங்கள் தாய்வழிச் சமூகங்களாக உள்ளன. இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த காசி, காரோ பழங்குடியினரரும், கர்நாடகாவில் உள்ள பந்துக்கள் சமூகமும், கேரளாவில் நாயர் சமூகமும், மாப்பில்லா எனப்படும் இசுலாமியச் சமூகமும் தாய்வழிச்சமூகங்கள்.
இலங்கையின் கிழக்குப்பகுதியைச் சேர்ந்த தமிழ் சமூகத்தில் முக்குவர்களும், இசுலாமிய சமூகமான மூர் சமூகமும் தாய்வழிச்சமூகங்கள். கண்டியைச் சேர்ந்த சில சிங்கல சமூகங்களும் தாய்வழிச்சமூகங்களின் வாரிசு மற்றும் திருமண முறைகளைப் பின்பற்றுகின்றன.
இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து காலனியத்தின் பின்னணியில் பெரும்பாலான தாய்வழிச்சமூகங்கள் தந்தை வழிச்சமூகங்களாக மாறிவருகின்றன.
தாய்வழிச்சமூகங்களின் பழக்கவழக்கங்கள்:
தாய்வழிச் சமூகங்களில் பெரும்பாலும் தாயின் பெயரே குடும்பப் பெயராக இருக்கும். இந்தச் சமூகங்களில் தாயை அடிப்படையாகக் கொண்டே வாரிசு முறை பின்பற்றப்படுகிறது. பெரும்பாலும் தாயின் வழித்தோன்றல்களான பெண்களுக்கு மட்டுமே சொத்தில் உரிமை உண்டு. பொதுவாகத் தாய்வழிச்சமூகத்தினர் திருமணத்திற்குப் பிறகு பெண்ணின் வீட்டிற்கு மணமகன் இடம்பெயர்ந்து வாழும் பழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். காசி, காரோ பழங்குடியினர் மத்தியில் இப்பழக்கம் உள்ளது.
தமிழ் மன்னர்களான மூவேந்தர்களில் சேரர்கள் ஆட்சி புரிந்த மண்டலம் கேரளம். தாய்வழிச் சமூகங்களைப்பற்றி நாம் அறியமுற்படும் போது, நமக்கு அண்டை மாநிலமான கேரளத்தின் தாய்வழிச்சமூகமான நாயர் சமூகத்தைப்பற்றி தெரிந்துகொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.
நாயர் சமூகத்தினர் கேரளத்தின் வடபகுதியான மலபாரிலும் , மத்திய பகுதியான வேம்பநாட்டிலும் வசிக்கிறார்கள். கேரளத்தின் மக்கள் தொகையில் நாயர் சமூகத்தினர் இருபது சதம்.
நாயர் சமூகம் முதலாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பழங்குடிகளாக இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்புப்பட்டயங்கள் மூலம் சேரப்படைகளில் நாயர்கள் இருந்தது தெரியவருகிறது.
13-ஆம் நூற்றாண்டில் சேரர்களின் வழித்தோன்றல்களான பெருமாள் எனும் மன்னர் குலத்திற்குப் பிறகு, நாயர் சமூகம் கேரளத்தின் சில பகுதிகளில் குறுநில மன்னர் சமூகமாக மாறியது. கொளத்து நாடு, வேர் நாடு, வளுவ நாடு, பாலக்காடு, கோழிக்கோடு போன்ற பகுதிகளை நாயர் குல மன்னர்கள் ஆண்டு வந்தனர்.
காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலகட்டதில், நாயர்கள் தாய்வழிச்சமூகமாக மற்ற தந்தை வழிச்சமூகத்தினருக்கு இடையில் வாழ்ந்தனர். கேரளத்தின் நாயர் சமூகம் ஆதிகாலத்திலிருந்தே தாய்வழிச்சமூகமாக இருந்தது என்றும் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு இரண்டாவது சேர வம்சத்தின் காலத்தில் கேரளத்தில் தாய்வழிச்சமூகங்கள் தோன்றியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
14-ஆம் நூற்றாண்டிலிருந்தே கேரளத்தின் தாய்வழிச்சமூகத்தைப் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகிறது.
நாயர் சமூகத்தில் ஆண்கள் செய்யும் தொழில்களுக்கு ஏற்ப உட்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. வட்டங்களின் தலைவர்கள், கிராமங்களின் தலைவர்கள், ராஜ வம்சத்தினரின் சேவகர்கள், ராஜ வம்சத்தினருக்கு பல்லக்கு தூக்குபவர்கள் என்ற அடிப்படையில் நாயர் சமூகத்தின் உட்பிரிவுகள் வகுக்கப்பட்டன. பொதுவாக அனைத்து நாயர் சமூகங்களையும் சேர்ந்த ஆண்கள் அரசனின் போர்ப்படையில் பணிபுரிந்தார்கள்.
கேரளத்தில் பெருமளவிலான நிலங்கள் நிலக்கிழார்களிடம் இருந்தன. ஜன்மி எனப்படும் நிலக்கிழார் குடும்பங்கள் கிராமத்தின் மொத்த நிலங்களையும் உடைமையாகக் கொண்டிருந்தன. அக்குடும்பங்கள் அடிமைகளைக் கொண்டு நேரிடையாக விவசாயம் செய்யக்கூடிய அளவுக்கு மட்டும் நிலத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு எஞ்சிய நிலத்தை உயர்ந்த சாதியினரிடம் மரபுவழியாக குத்தகைக்கு விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். உயர்சாதி குத்தகைக்காரர்கள் இந்நிலங்களை தங்களுக்கு கீழே இருந்த பிற சாதியினரிடம் கீழ்குத்தகைக்கு விட்டனர்.
நிலச்சுவான்தாரர்கள் கிராமத்துக்கு கிராமம் வேறுபட்டனர். சில இடங்களில் அரச குடும்பத்தின் உட்பிரிவுகளோ, தந்தைவழிசமூகத்தைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணக் குடும்பங்களோ, நாயர் தாய்வழிச்சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களோ நிலச்சுவான்தாரர்களாக செயல்பட்டனர். சில கிராமங்களில் கோவிலுக்கு நிலம் சொந்தமாக இருந்தது. அந்த நிலத்தில் வேளாண்மை செய்யும் உரிமையை வழிவழியாக சில குடும்பங்கள் பெற்றிருந்தன.
நிலச்சுவான்தாரர்களாக இருந்த நாயர்கள் தங்கள் நிலத்தை தங்களைவிட வசதி குறைந்த நாயர் உட்பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கே பெரும்பாலும் குத்தகைக்கு விட்டனர். சில நாயர் குடும்பங்கள் வேளாண்மையில் நேரிடையாக ஈடுபடாதபோதிலும் வழிவழியாக நிலத்தின் மீதான உரிமையைப் பெற்ற நிலச்சுவான்தாரக் குடும்பங்களாக இருந்தன.
நாயர் கூட்டுக்குடும்பத்திற்கு தரவாடு என்று பெயர். ஒரு தாயின் வழிவந்த சகோதரிகளும், சகோதரர்களும் தராவாட்டின் உறுப்பினர்கள். ஏறக்குறைய 200 உறுப்பினர்கள் தரவாட்டில் வசிக்கும் பழக்கம் இருந்தது.
நாயர்சமூகத்தில் 19-ஆம் நூற்றாண்டுவரை பெண் வயதிற்கு வருவதற்கு முன்னர் தாலி-கட்டும் சடங்கு நடத்தப்பட்டது. உயர்குல பரம்பரையைச் சேர்ந்த நாயர் சமூகங்களில் நம்பூதிரி பிராமணர் தாலியை கட்டுவது வழக்கம். இந்த சடங்கிற்குப்பின் நாயர் குலப்பெண் அதே வகுப்பைச் சேர்ந்த ஆணையோ, அல்லது உயர் வகுப்பைச் சேர்ந்த ஆணையோ துணையாகக் கொள்ளும் உரிமையைப் பெறுகிறார்.
இந்த உறவுக்கு சம்பந்த உறவு என்று பெயர். பொதுவாக உயர்சாதி ஆடவரான நம்பூதிரி ஆண்களுடனேயே உயர் சாதி நாயர் குலப் பெண்கள் சம்பந்த உறவுகள் கொண்டனர்.
படைசேவை புரிந்த நாயர்களில், அவர்களது வகுப்பைச் சேர்ந்த ஆண்களுடனேயே பெண்கள் சம்பந்த உறவுகள் கொண்டனர். சம்பந்த உறவுகளில் கணவர் பெண் வீட்டிற்கு அடிக்கடி வந்து போவார். ஆக, நாயர் தரவாட்டில் தந்தையென்ற ஒருவர் வசிப்பதில்லை. பெரும்பாலும் visiting partners ஆகவே இருந்தார்கள்.
தாயின் மூத்த மகன் குடும்பத் தலைவன் இடத்தில் இருந்து சகோதரியின் குழந்தைகளையும், குடும்ப நலத்தையும் பேணுவார். குடும்பத்தலைவரான தாய்மாமன் கரனவன் என்று அழைக்கப்படுகிறார். கரனவன் மற்ற தரவாட்டைச் சேர்ந்த நாயர் பெண்ணின் கணவனாக அவ்வப்போது அவர் வீட்டுக்குச் சென்று வரலாம். அவருடைய குழந்தைகள், அவரது மனைவியின் குழந்தைகளாக வேறு தராவாட்டில் வளர்வார்கள்.
நாயர்களைப் பொறுத்தமட்டில் ஒரே வீட்டில் கணவன் மனைவி தங்கவேண்டிய அவசியமில்லை. தனக்குப் பிடித்த ஆணுடன் பழகி குழந்தைகள் பெறும் சுதந்திரம் பெண்களுக்கு இருந்தது. பெண்ணிற்கு ஒரு ஆடவனைப் பிடிக்கவில்லையெனில், அந்த ஆணை தன் வாழ்க்கையிலிருந்து விலக்கிவிடும் சதந்திரம் இருந்தது. பழங்குடியின சமூகத்தைச் சேராத இந்து பெண்களில் நாயர்குலப் பெண்களுக்கு மட்டும்தான் பாலியல் சுதந்திரம் இருந்துள்ளது.
உயர் பிராமண குலத்தவரான நம்பூத்திரி ஆண்கள் நாயர் குலப்பெண்களுடன் சம்பந்த உறவுகளில் ஈடுபட முக்கிய காரணம் நிலம்தான். கேரளத்தில் குடிபுகுந்த பிராமணரான நம்பூதிரிகள் தம்மை நிலத்தேவர் என நிலைநாட்டி மத விவகாரங்களில் அளவில்லா செல்வாக்கு பெற்று விளங்கினர். பெருநிலக்கிழாராகவும், குறுநில மன்னர்களாகவும் ஆட்சித்துறையில் மிகுந்த அதிகாரத்தைக் பெற்றிருந்தனர்.
தந்தைவழிச் சமூகமான நம்பூதிரிகள் சமூகத்தில் சொத்தை நிர்வாகம் செய்யும் உரிமை மூத்த மகனுக்கே உரித்தானது.
இளைய மகன்களுக்கு வாரிசுகளை உருவாக்கும் உரிமை கிடையாது. அவர்களுக்கு வாரிசு உருவானால், குடும்பச்சொத்து துண்டாடப்படும் என்பதால், அவர்கள் திருமணம் செய்துகொண்டு, பெண்ணை வீட்டிற்கு அழைத்துவந்து வாழும் உரிமை கிடையாது. எனவே அவர்கள் நாயர்குலப் பெண்களுடன் சம்பந்த உறவுகளில் ஈடுபட்டனர். நாயர் பெண்ணுக்கும், நம்பூத்திரி ஆணுக்கும் பிறந்த குழந்தைகள் நாயர் பெண்ணின் மக்களாக நாயர் பெண்ணின் தரவாட்டிலேயே வசித்தனர்.
நாயர்குலத்தில் சொத்துக்கள் குடும்பத்தின் கூட்டுச்சொத்தாகும். தரவாட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சொத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு. குடும்பத்தின் எந்த உறுப்பினருக்கும் தனது பங்கைப் பிரித்துக்கேட்கும் உரிமை இல்லை. தரவாட்டின் நிலத்தை கரனவன் நிர்வகிப்பார். அவரின் சகோதரர்கள் பெரும்பாலும், படைவீரர்களாகவோ, அரசரின் சேவகர்களாகவோ பணிபுரிவார்கள்.
கரனவன் தனித்து ஈட்டிய சொத்து அவர் சேர்ந்த தரவாட்டின் சொத்தாகிவிடும். அந்த தரவாட்டைச் சேர்ந்த பெண்கள் தங்களது வாரிசுகளுக்கு அந்த சொத்தை உறுதிசெய்வார்கள். தரவாட்டின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, மூத்த உறுப்பினர்கள் கூடி முடிவு செய்து தரவாட்டைப் பிரிப்பார்கள். இவ்விதம் தோன்றும் புதிய தாவழி பிறகு தனித்த தரவாடாகிவிடும்.
திருவிதாங்கூர் அரச பரம்பரை தாய்வழிச்சமூகத்தைப் பின்பற்றிய பரம்பரை. ராஜாவின் வாரிசு அவரது சகோதரியின் மகனாவார். சகோதரியின் மக்களே வாரிசு என்பதால் இம் முறையை மருமக்கள் தாயம் எனப்படுகிறது. தந்தைவழிசமூகத்தில் ஆணின் பிள்ளைகள், மக்கள் அல்லது வாரிசாகக் கருதப்படுவதால், மக்கள் தாயம் என அழைக்கப்படுகிறது.
நாயர்களின் திருமணம், வாழ்விடம், நிலவுடைமை மற்றும் வாரிசுமுறை சார்ந்த பழக்கவழக்கங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குறிப்பாக 18ஆம் நூற்றாண்டிலிருந்து மாறத் துவங்கி தற்போது முற்றிலும் மாறிவிட்டது.
தற்போது தரவாடுகள் வழக்கில் இல்லை. அவை பிரிக்கப்பட்டு பெண்களும் ஆண்களும் வாரிசாகி விட்டனர். நாயர்களின் திருமண முறை மாற்றமடைந்துவிட்டது. தாலி சடங்கு கைவிடப்பட்டுவிட்டது. நாயர் பெண்கள் சம்பந்த உறவுகளைக் கைவிட்டு விட்டு ஒரு கணவர் முறைக்கு மாறிவிட்டனர். கணவர் விஜயம் செய்யும் பழக்கம் 1950களுக்குப்பிறகு மறைந்தே விட்டது. விதவைகள் மறுமணம் கூட மறுக்கப்படும் சூழல் உள்ளது. திருமணங்கள் நிலைக்க வேண்டும் என்ற கோட்பாடு புதிதாக தோன்றியது. நாயர் பெண்கள் நம்பூதிரி ஆண்களுடன் பழகும் வழக்கம் மாறிவிட்டது. அவர்கள் தங்கள் குலப்பெண்களையே மணக்கின்றனர். இவ்வகை மாற்றங்கள் கேரளாவின் அனைத்து பகுதிகளிலும் நிகழ்ந்தது. இருப்பினும் மாற்றத்தின் அளவும், வேகமும் பகுதிகளுக்குத் தகுந்தவாறு நிகழ்ந்தது.
தாய்வழிச்சமூகமான நாயர் சமூகம் நான்கு காரணங்களால் தந்தைவழிச்சமூகமாக மாறியது.
1. 1792-ஆம் ஆண்டு மலபார் பிரிட்டிஷ் அரசுடன் இணைக்கப்பட்டபோது, நாயர் படைகள் கலைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கொச்சின் மற்றும் திருவிதாங்கூர் ராஜாக்களும் நாயர் படைகளைக் கலைத்தனர். படைவீரர்களாக இளைய நாயர்கள் வீடு திரும்பினர். இக்காலகட்டத்தில் அவர்களுக்கு நிலைத்த திருமண உறவுகளின் மேல் நாட்டம் ஏற்பட்டது.
2. உள்ளூர் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம். கல்வித் தகுதி பெற்ற நாயர்களுக்கு அரசுப்பணிகளில் அமரும் வாய்ப்பு கிட்டியது. தனிநபர் வருவாயைப் பெருக்கிக்கொள்ளும் வாய்ப்பு உருவானபோது, இளம்நாயர் ஆண்கள் தங்களுக்கென்று குடும்பங்களை உருவாக்கிக்கொள்ள விரும்பினார்கள்.
3. மற்ற சமூகத்தாரின் குடும்பம் சார்ந்த ஒழுக்க நியதிகள், நாயர் குடும்ப பழக்கவழக்கங்களுக்கு எதிரான பார்வையை சமூகத்தில் பலப்படுத்தியது. சென்னை மற்றும் இங்கிலாந்தில் படித்து விட்டுத்திரும்பிய நாயர் இளைஞர்களுக்கு அவர்கள் தாய்மார்களின் பல கணவருடன் கூடும் பழக்கம் பிடிக்கவில்லை.
4. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் புதிய நிலம் மற்றும் திருமண சட்ட நடவடிக்கைளால் தாய்வழிச்சமூகத்தின் மருமக்கள் தாய முறையில் மாற்றம் ஏற்பட்டது.
1865-ஆம் ஆண்டில் நிலத்தின் குத்தகையாளர்களை நிலத்தின் உரிமையாளராக்கும் சட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் இயற்றியது. இதன் மூலம் நிலம் முதன்முறையாக சந்தையாக்கல் செய்யப்பட்டது. தரவாடுகளைப்பிரித்து, நிலத்தை விற்றால் பொருள் ஈட்டமுடியும் என்ற ஆவல் இளைஞர்கள் மத்தியில் ஓங்கியது. மேலும் தனிநபர் பொருள் ஈட்டக்கூடிய பொருளாதார சூழலில், நாயர் தரவாடுகள் பிளவுபட்டன.
மலபாரில் நிகழும் திருமண முறையை ஆராய்ந்து ஒழுங்குபடுத்தும் சட்டத்தை இயற்ற 1891-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. இக்குழு சம்பந்த உறவுகள், நாயர் பெண்களை நம்பூதிரி ஆண்களின் சுரண்டலுக்கு உட்படுத்துகிறது எனக் கூறியது. மேலும் நம்பூதிரி இளைஞர்கள் தங்கள் குலப்பெண்களை விடுத்து, நாயர்குலப் பெண்களுடன் பழகுவதால், நம்பூதிரி குலத்துப்பெண்கள் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்யாமல் தனித்து வாழும் சூழலில் தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் கூறியது. இக்குழு சம்பந்த உறவுகள் நாயர் பெண்களுக்கு பாலியல் சுதந்திரத்தைக் கொடுத்தாலும், நம்பூத்திரி பெண்களை பாலியல் வறட்சிக்குத் தள்ளியது என்கிற குற்றச்சாட்டை வைத்தது.
இதன் விளைவாக 1896-ஆம் ஆண்டு நாயர் சமூகம் உட்பட அனைத்து சமூகங்களின் ஆண்பிரதிநிதிகளிடமும் கருத்து கேட்கப்பட்டு, மலபார் திருமண சட்டம் இயற்றப்பட்டது. தாய்வழிச்சமூகமான நாயர் குலத்தின் பெண்களிடம் புதிய திருமணச் சட்டத்தைப்பற்றி கருத்து கேட்கப்படவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.
1913-ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் நாயர் சட்டததையும், 1920-ஆம் ஆண்டில் கொச்சின் நாயர் சீர்திருத்த சட்டத்தையும் பிரிட்டிஷ் அரசாங்கம் இயற்றியது. மலபார் திருமணச்சட்டம் சம்பந்த உறவுகளை திருமணம் என்ற சட்டகத்திற்குள் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின்படி நாயர் ஆண்கள் ஈட்டிய தனிநபர் சொத்தில் அவர்களது மனைவிகளுக்கும், பிள்ளைகளுக்கும் பங்கு உண்டு.
19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாயர் படைகள் கலைக்கப்பட்டதால் வீடு திரும்பிய இளைய நாயர்கள், கரனவனாக ஆசைப்பட்டு தரவாடுகளைப் பிரித்தனர். அதிக உறுப்பினர்களைக் கொண்ட பெரிய தாய்வழிக்குடும்பங்கள், குறைந்த உறுப்பினர்களைக் கொண்ட சிறிய தாய்வழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டன.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிலம் மற்றும் திருமணம் சார்ந்த சட்டங்களுக்குப்பிறகு, நாயர் குடும்ப ஆண்களும் பெண்களும் தனிச் சொத்தின் உடைமையாளர்களாக விரும்பி தரவாடுகளைப் பிளவுபடுத்தினர்.
நாயர் ஆண்கள் சொத்துக்களுக்கு உரிமையாளர்களாக மாறியபிறகு, சட்டப்படி தங்களது மனைவியையும் பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு வந்தது. இதன்பிறகு பெண்களும் தங்களது பிள்ளைகளுடன், கணவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர். தாய்வழித் தரவாடுகள் பிளவுற்று, தந்தையை மையப்படுத்திய புதிய இல்லங்கள் உருவாகின. பெண்கள் தங்கள் கணவன் வீட்டிற்கு இடம் பெயரத்தொடங்கிவிடார்கள். குடும்பத்தை விட்டு பிரியும் பெண் நிலத்தையும் விட்டு பிரியும் சூழலில், நிலத்திற்கு மாறாக வரதட்சனை அதிகம் பெறுகிறார்கள். இதனாலேயே கேரளத்தில் அதிக வரதட்சனை பெறும் பழக்கம் தோன்றியது.
பெண்கள் உயர்ந்த நிலையில் இருந்த சமூகம், கல்வியிலும் உடல் நலத்திலும் முன்னணி நிலையை அடைந்திருந்தது. பெண்களின் கல்வி விகிதம் உயரும் போது, பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், குழந்தைகள் மரணமும் குறைகிறது. கேரளாவும், இலங்கையும் தாய்வழிச்சமூகங்களாக இருந்ததினாலேயே கல்வி மற்றும் உடல்நலத்தில் முன்னிலை வகிக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் தாய்வழிச்சமூகங்களில் ஆண்/பெண் விகிதம் ஆரோக்கியமாக இருக்கிறது.
கலாச்சாரம், பண்பாடு என்பது இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம் வேறுபடுகிறது.
பெண்கள், ஆண்களின் பராமரிப்பிலும், கட்டுப்பாட்டிலும், பாதுகாப்பிலும் தான் இருக்க வேண்டும் என தந்தை வழிச்சமூகங்கள் பெண்களுக்கு ஒழுக்க விதிமுறைகளைக் கற்பிக்கின்றன. இது ஆண்களை மையப்படுத்திய தந்தை வழிச்சமூகங்களின் கலாச்சாரம். தந்தை வழிச்சமூகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை கலாச்சாரமும் பேரதிகம். சதி, பெண் சிசுக்கொலை, விதவை முறை போன்ற கொடிய வன்முறைகள் தந்தை வழிச்சமூகங்களில்தான் வேரூன்றியிருந்தன.
தாய்வழிச்சமூகங்களில் பெண்கள் தங்கள் சொந்தங்களிலிருந்து அந்நியப்படுத்தப்படவில்லை. இதனால் இச்சமூகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறைவாகவே இருந்தது. தாய்வழிசமூகங்கள் தந்தை வழிச்சமூகமாக மாற்றப்பட்டபோது, பெண்கள் அடிமட்ட நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை மறுக்க முடியாது.
எந்த ஒரு சமூகத்திலும், பாலின ரீதியிலான வேறுபாட்டை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே முக்கியம். தாய்வழிசமூகத்து ஆண்களின் சொத்துரிமையை சட்டங்கள் மூலம் நடைமுறைபடுத்திய இந்திய அரசாங்கம், தந்தைவழிசமூகங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளுக்கு எதிராகவும், பெண்களின் சொத்துரிமைக்கும் எவ்வளவு தான் சட்டங்கள் இயற்றினாலும், அதை இன்றளவும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை குறிப்பிடவேண்டியுள்ளது. இந்தியாவின் ஆண்/ பெண் குழந்தை விகிதத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு இதற்கு சாட்சியாக விளங்குகிறது.
Reference: A field of one's own, Bina Agarwal, Cambridge University Press.

Comments

  1. தோழர் ,ஏன் 2022 க்கு மேல் பதிவுகளே இல்லை.Bigbang theory அற்புதமான தியரி.அதைப்பற்றி எதுவும் காணவில்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!

பெரியார்